கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் பொதுமக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத வகையில் 3 பிரதேசங்களை இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்தாண்டின் ஆரம்பத்தில் தொடரப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இவ்வாண்டு நடுப்பகுதியுடன் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் மீள்குடியேற்றம் எனும் பெயரில் அழைத்து வரப்பட்டு இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் சுமார் ஆயிரம் வரையான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்ப்பகுதியை அண்டியுள்ள பரவிப்பாஞ்சான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய இராணுவ படைமுகாமினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியே வாழ்ந்து வருகின்றனர்.
இதேபோல இரணைதீவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமினால் இந்தக் கிராமத்தில் மக்களே கிடையாது. கரும்புத் தோட்டம் பகுதியில் இருந்து சுமார் 30 வரையான விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவை எதுவும் நடைபெறாததுபோல் மாவட்டச் செயலகம் நடந்து கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பரவிப்பாஞ்சானில் 100 குடும்பங்களின் பதிவுகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்துள்ள மாவட்டச் செயலகம் இராணுவத்தினர் விரைவில் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் எனக் கூறியுள்ளது.
இதேபோல் இரணைதீவில் மக்கள் எவரும் சென்று வாழ விரும்பவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றது. ஆனால் அங்குள்ள கடற்படை முகாமினால் மக்கள் எவரும் குடியேற்றப்படவில்லை என்பதே உண்மையென மக்கள் கூறுகின்றனர். நிலைமை இவ்வாறிருக்க மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment