1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆர்வம் காட்டியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக ஜனாதிபதி ராஜபக்ச தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்த போதிலும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர் அதிகாரத்தை கூட்டிக் கொள்வதில் ஜனாதிபதி நாட்டம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்கினால், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ராஜபக்ச சகோதரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக அந்தக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான அமைச்சர்கள் பிரதிநிதி அமைச்சர்கள் அரசாங்கத்தில் பதவி வகித்தாலும், ராஜபக்ச சகோதரர்களே முக்கிய தீர்மானங்களை எடுக்கின்றனர்.
மிக முக்கியமான நிதி, பாதுகாப்பு போன்ற அமைச்சுக்களை ஜனாதிபதியே நேரடியாக நிர்வாகம் செய்கின்றார். தேசிய வரவு செலவுத்திட்டத்தின் 60 வீதமான நிதி ஒதுக்கீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிர்வாகம் செய்கின்றார். கொழும்பு பணக்கார முக்கிய பிரபுக்களை ராஜபக்ச சகோதரர்கள் தமது நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளவில்லை. குறிப்பாக கொழும்பு 07 ஐச் சேர்ந்த பணக்கார புத்திஜீவிகளுடன் மிகவும் குறைந்தளவான உறவினையே ஜனாதிபதி பேணுகின்றார் என அமெரிக்கத் தூதுவர் பிளேக் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
நன்றி தமிழ்வின்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment