அமெரிக்கா தங்களுடன் நேரடியாகச் சண்டையிடும் என்று எண்ணிய புலிகள்! விக்கிலீக்ஸ் தகவல்.


என்றாவது ஒருநாள் அமெரிக்கா தங்களுடன் நேரடியாகச் சண்டையிடும் என்று புலிகள் நினைத்தார்கள் என்பதுடன் தமது அமைப்புத் தொடர்பில் அமெரிக்கா கொண்டிருந்த நிலைப்பாடு குறித்தும் அவர்கள் தீவிர கவலை கொண்டிருந்தார்கள் என்று 2002 ஒக்ரோபர் மாதத்தில் கொழும்பில் இருந்து வொஷிங்ரனுக்கு அனுப்பப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது கொழும்பில் அமெரிக்கத் தூதராகப் பணியாற்றிய அஸ்லி வில்ஸ் அனுப்பி வைத்த “கேபிள்” செய்தியை “விக்கிலீக்ஸ்” இணையம் கசிய விட்டுள்ளது. அமெரிக்காவுடன் நேரடியான தொடர்புகள் இல்லாத காரணத்தால் வேறு வழிவகைகளில் தமது இயக்கம் தொடர்பான வொஷிங்ரனின் நிலைப்பாட்டை குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகளுடனான பேச்சில் அரச தரப்புப் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட அப்போதைய அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்த கருத்தின் அடிப்படையில், அஸ்லி வில்ஸ் இந்தத் தகவலை அனுப்பி வைத்துள்ளார்.

“தாய்லாந்தில் நடந்த பேச்சுக்களின் போது, இலங்கைப் பிரச்சினையில் எங்கே (எந்தப் பக்கம்) அமெரிக்க அரசு நிற்கின்றது என்று அறிவதற்காக அன்ரன் பாலசிங்கம் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டார்”என்று மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். “மிலிந்தவின் கருத்துப்படி இந்த விடயத்தை அறிவதில் பாலசிங்கம் அதிக ஆர்வம் காட்டியுள்ளார் என்று தெரிகிறது. உதாரணத்துக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் பேச்சு முடிந்த பின்னர் தான் அமெரிக்கா செல்ல உள்ளார் என்று மிலிந்த கூறியுள்ளார். உடனே பாலசிங்கம் என்னத்துக்கு? ஆயுதம் வாங்கவா? என்று கேட்டுள்ளார். இதற்கு முன்னர் அமெரிக்கா சென்று வந்தபோதே அந்த வேலையைத் தான் முடித்து விட்டேன் என்று நகைச்சுவையாகக் கூறினார் என்று மிலிந்த தெரிவித்தார்”  இப்படி அந்தக் “கேபிள்” செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அந்தக் செய்தியில் இந்த விடயம் பற்றிய தனது கருத்தையும் அஸ்லி வில்ஸ் பதிவு செய்துள்ளார். “மொறகொடவின் கருத்துக்களைப் பலப்படுத்துவது போன்று வேறு தகவல் மூலங்களில் இருந்து கிடைத்த செய்திகளும் உள்ளன. தமது அமைப்புத் தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பில் புலிகள் கவலை கொண்டுள்ளார்கள் என்று அறிய முடிகிறது. செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர் இருந்து இப்போது வரைக்கும் இந்தக் கவலை இருப்பதாகத் தெரிகிறது. புலிகளின் கவலையின் இதயமாக இருந்ததெல்லாம், என்றாவது ஒருநாள் அமெரிக்கா தங்களுடன் சண்டையிடும் என்பதுதான். அமெரிக்கா குறித்த புலிகளின் இந்தப் பயம்தான் சமாதானப் பேச்சுக்களில் புலிகளைத் தொடர்ந்தும் ஈடுபட வைத்துக் கொண்டிருக்கிறது என்று மொறகொட உட்பட இலங்கையர்கள் பலர் நம்புகின்றனர்” என்று அமெரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|